
“யுத்தம் முடிவடைந்து ஓரிரு வருடங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் நோக்கில் ஓர் இனத்தை அழிக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டன. இன்று தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாகக் குரல் எழுப்பப்படுகின்றது. இதனைத் தான் ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பார்கள். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று தெற்கில் கிடைக்கிறது’’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (07) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டுக்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
‘‘விளையாட்டு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையோ அல்லது விளையாட்டு வீரர்களின் பொருளாதாரத்தையோ மேம்படுத்துகின்றது. இந்நிலையில், வெற்றி பெறுவதற்காக விளையாட்டு வீரர்கள் இந்த ஊக்கப் பதார்த்தங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும். திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத காரணத்தால் தான் எவ்வழியிலாவது வெற்றிப்பெற வேண்டுமென்ற நோக்கத்தில் ஊக்கப் பதார்த்தங்களைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி வீரர்கள் சிந்திப்பதில்லை. இந்தச் சட்டமூலம் இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்.
நாட்டில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்படுவது தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பாரதூரமானதாக பேசப்படுகிறது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் பல்வேறு பகுதிகளில் பெருந்தொகையான போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது. செல்வந்தர்கள், ஒருசில அரசியல்வாதிகள் இந்தப் போதைப்பொருள் வர்த்தகத்தின் பின்னணியில் இருக்கின்றனர்.
நாட்டிலிருந்து போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பது என்பது அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. இந்தியாவில் வெளியாகும் ‘ஆனந்த விகடன்’ என்ற சஞ்சிகையில் ‘இலங்கையை போதைப்பொருட்களாலும் மண்டையோடுகளாலும் சூழ்ந்த முத்து’ என்று சித்திரிக்கும் வகையில் கேலிச்சித்திரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன. மண்டையோடுகளும் மனித எச்சங்களும் மீட்கப்படுகின்றன. தெற்கிலும் புதைகுழிகள் தோண்டப்படுகின்றன. பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றன. அத்துடன் ஆயுதங்களும் கைப்பற்றப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தம் இடம்பெற்றதா அல்லது தெற்கில் இடம்பெற்றதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.
யுத்தம் முடிவடைந்து ஓரிரு வருடங்களில் எமது மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் வெளிப்படையாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. பாடசாலை மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் நோக்கில் ஒரு இனத்தை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இப்போது தெற்கில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போதைப்பொருள் விநியோகிக்கப்படுகிறது என்று செய்தி வெளியாகியுள்ளதைப் பார்த்தேன். இதனைத் தான் ‘தன்வினை தன்னைச் சுடும்’ என்பார்கள். 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கில் செய்தவற்றின் பிரதிபலன் இன்று தெற்கில் கிடைக்கிறது. ‘செல்வந்த நாடு அழகான வாழ்க்கை’ என்ற இலக்கை அடைய வேண்டுமானால் அரசாங்கம் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும். ஆனால் அதனை செய்வது கஷ்டம்’’ என்றார்
